இனி உன்னை காதலிக்கிறேன்

December 23, 2009

தோலோடு தோலாக இருந்து

எனக்கு தோள் கொடுத்து இருக்கிறாய்

காலை  முதல் இரவு  வரை என்னோடு இருக்கிறாய்

என்னோடு எல்லா ஊர்களுக்கும் வந்திருக்கிறாய்

நான் விழுந்தால் நீயும் விழுவாய்

நான் எழுந்தால் நீயும் எழுவாய்

வெய்யிலில் காய்ந்தாலும்  மழையில் நனைந்தாலும்

உன்னைப்பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை

நான் சோம்பேறியாக இருக்கும் போது நீ

வேகமாக இயங்கி என்னை சுருசுருப்பாக்குவாய்

எனக்கு உன் மேல் கோபம் வரும்

அதிசயமாக நான் சீக்கிரம் கிளம்பிவிட்டால் நீ

மெதுவாக செல் என தட்டிக்கொடுப்பாய்

எனக்கு உன் மேல் அன்பு வரும் அதுவும்

சில நொடிகள் தான் உடனே சென்றுவிடும்

நீ கீழே விழுந்திருக்கிறாய் அப்போது கூட

நான் கவலைப்பட்டதே இல்லை

உனக்கென்று ஒரு இடமில்லை எங்கெங்கோகிடப்பாய்

ஆனால் ஏனோ  உன்மேல் நான் அக்கறை காட்டியதில்லை

நீயும் கோபம் கொள்வதே இல்லை என்மேல்

உனக்கு கோபம் வரும் என்று எனக்கு தெரியாது

மன்னித்துக்கொள் நான் களைப்படைந்தாலும் நீ

ஓயாமல் ஓடிக்கொண்டிருப்பாய்  ஆனால்

உனக்கு கோபம் வரும் என்று எனக்கு தெரியாது

மன்னித்துக்கொள்   நீ என்னை பழி வாங்குவாய்

என தெரியாது நிஜமாக மன்னித்துக்கொள்

என் நேர்முகத்தேர்விற்கு சில மணி நேரம்

முன்பு  நீ உன் ஓட்டத்தை நிருத்திக்கொள்வாய்

என்றும் நான் தாமதமாக சென்றதால் எனக்கு

கிடைக்கவேண்டிய வேலை பறிபோகும்

என்றும் எனக்குநிஜமாக  தெரியாது

மன்னித்துக்கொள்…கடிகாரமே

இனி உன்னை காதலிக்கிறேன்

என்னை பழி வாங்கிவிடாதே….

என் சொந்த ஊர்

December 20, 2009

பச்சை பசேலென இருக்கும் கிராமம் அது, ஆனால் பெயர் என்னவென்று தெரியவில்லை . பார்க்க அப்படியே எங்கள்  ஊரை ஞாபகப்படுத்தியது . தூரத்தில் தெரிந்த மலைகள் மேற்கு தொடர்ச்சி மலையை நினைவுபடுத்தியது . எங்கள் ஊரும்  மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் . நான் மேற்படிப்புக்காக  சென்னை வந்தேன் ,  மும்பையில் வேலை கிடைத்ததால் அங்கேயே இருந்துவிட்டேன் . இந்த கிராமத்தை பார்த்தவுடன் குறும்பும் கும்மாளமும் நிறைந்த என் பள்ளி வாழ்க்கை என் மனதில் ஓடுகிறது . பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது இந்த  கிராமம், சிறிய சாலை  இரண்டு புறமும் வரிசையாக குடிசை வீடுகள் ஆங்காங்கே சில ஆடு மாடுகள் என்று . ஒரு பெண் கோலம் வரைந்து கொண்டிருக்கிறாள் மார்கழியில்  எங்கள் ஊரிலும் பல வண்ணங்களில் கோலம் போடுவார்கள் , அதோடு இல்லாமல் அதன் நடுவே மாட்டு சாணம் வைத்து மேலே ஒரு மஞ்சள் நிற பூவையும் வைப்பார்கள் . கோலம் வரையும் பெண்ணுக்கு இரண்டு சிறுமிகள் உதவி செய்கிறார்கள்  , சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கிறாகள் . மாலை வெயில் இந்த கிராமத்தை இன்னும் அழகாக காட்டுகிறது .

வயல்களில் வேலை செய்துவிட்டு ஆண்களும் பெண்களும்  பேசிக்கொண்டு நடந்து வருவது தெரிகிறது . என் தாத்தாவும் என் அப்பாவும் நடந்து வருவதை போலவே எனக்குதோன்றுகிறது .  ஊருக்கு நடுவே இருக்கும் கோவில்  நிச்சயம் எங்கள் மாரியம்மன் கோவில் தான், பார்க்க அப்படியே இருக்கிறது  . நான் தேவிக்கு காதல் கடிதம் கொடுத்து மாட்டிகொண்டது அங்கே தான் . குடிசை வீடுகளை ஒட்டியபடியே சிறிய ஓடை ஓடுவது இன்னும் அழகு . அங்கே சிலர் துவைக்கிறார்கள் என்று நினைக்கிறேன் எனக்கு சரியாக தெரியவில்லை… ஆனால் பார்க்க நன்றாகவேஇருக்கிறது . சிறிது தூரத்தில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கிறாகள். எங்கள் ஊரில் நாங்கள் எப்போதும் விளையாடுவது கபடி தான் . ஒரு முறை கபடி விளையாடும் போது என் பல் உடைந்து விட்டதால் விறகு கட்டையோடு என் அப்பா விரட்டினார் .இப்போதும்  என் வீட்டு கண்ணாடி அதை ஞாபகப்படுத்தி சிரிக்கவைக்கும் . என் அப்பா இறந்த போது கடைசியாக சொந்த மண்ணை மிதித்தேன் . எட்டு வருடங்களை தாண்டிவிட்டது இன்னும் செல்லவில்லை…எப்போது செல்வேன் என்று எனக்கே தெரியவில்லை ஆனால் உலகம் முழுவதும் சுற்றிவிட்டேன் . இந்த சிறிய கிராமம் தினமும் என்னை சந்தோஷப்படுத்தும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை . இந்த ஊருக்கு நல்ல பெயர் வைத்திருக்கலாம் ஏனோ அதை வரையவில்லை . வரிசையாக இருந்த தென்னை மரங்களின் கீழே 9,000 ரூபாய் என்று எழுதியிருந்தது . வாங்கிகொண்டு மகிழ்ச்சியாய் வீட்டிற்க்கு சென்றேன் காரின் பின்சீட்டில் என் சொந்த ஊரே இருப்பது போன்ற ஒரு உணர்வு .

என் மனைவி சிரித்தபடியே அந்த ஓவியத்தை பிரித்தாள் ,அவள் முகம் மாறியது . என் முகமும் வாடியது  இவ்ளோ பெரிய வீட்ல  இப்படி ஒரு பெயிண்டிங்கா …இந்த கிராமம் எனக்கு சுத்தமா பிடிக்கல .  Michelangelo , Vincent van Gogh, da vinci , Pablo Picasso பெயிண்டிங் இருக்க வேண்டிய வீடு இது, நல்லாவே இல்ல இது வேண்டாம் என்று என் மனைவி சொன்னபோது ……..

க.வி.த

December 6, 2009

1 .புத்தகம் எழுத நினைத்தேன்

அம்மாவின் சமையலை பற்றி

காதலியின் நீண்ட கரும் கூந்தலைப்பற்றி

முதன்முதலாய் புத்தகம் எழுத நினைத்தேன்-ஆனால்

அதற்குள் புக்கர் பரிசு கிடைத்துவிட்டது – லீல் ,வயது -45 , எண்- 1004.

2 . கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்

அலுவலகம் சென்று விட்டேன் – அவசரத்தில்

உள்ளாடை அணியாமலேயே

தேநீர் இடைவேளையில் வீட்டிற்கு ஓடினேன்

பேண்ட் ஜிப் இயங்காததால் -  விக்கீ  (எ )  கௌசி .வயது – 37 , எண்-498.


3 . தலையில் துளியும் முடி இல்லை  ஆனால்

பாக்கெட்டில் பெரிய சீப்பு இருந்தது

காரணம் கேட்டேன், வெடித்து சிரித்தேன்

முதுகு சொரிய என்றதால்  -  கவிஞர்  ர்மசேகர் . வயது -44 , எண் – 649.

சிறந்த கவிதைக்கான போட்டியில் இந்த மூன்று கவிதைகளுக்கும் நிறைய ஓட்டுகள் விழுந்தன .  பொது அறிவு தேர்விலும் இவர்கள் கலந்துகொண்டு நன்றாகவே  எழுதியிருப்பதாக கூறினார்  ஒரு அதிகாரி . இந்த மூன்று கவிதைகளுக்கும் கண்டிப்பாக பரிசு தந்தே தீரவேண்டும் என்றார் மாடசாமி IPS . அனைவரும் ஒட்டு மொத்தமாக சிரித்தபடியே தலையாட்டினார்கள் . இவ்வளவு  அருமையாக  கவிதை எழுதுவார்கள் என்று நினைக்கவே இல்லை என்றும் ,  இவர்களை இன்னும் நன்றாக ஊக்குவிக்கவேண்டும் என்றும் தேர்வுக்குழுவில் இருந்த அனைவரும் பேசிக்கொண்டார்கள் .அதன்படியே சுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் இந்த மூன்று பேருக்கும் பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது . சந்தோஷமாக தங்கள்  குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியில் மூழ்கினார்கள்.

கலீல், விக்கீ , தர்மசேகர் என்ற இந்த மூன்று ஆயுள் தண்டனை கைதிகளுக்கும் நல்லெண்ண அடிப்படையில் தண்டனையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்    மாடசாமி IPS .சிறைச்சாலையில் இருந்த எல்லா கைதிகளும் எழுந்து நின்று கை தட்டினார்கள் .

கொலை-3

December 4, 2009

இரண்டாம்  பாகத்தின் (கொலை -2)தொடர்ச்சி ….

”மீண்டும்ஆள் யார் ”? என்றான் சாமி.

நானும் அப்படித்தானே நெனச்சுட்டு போனேன் ஆனா ஆள் இல்ல… கொல்ல போறது 10 மாச குழந்தைய …

இதைக்கேட்டதும் சாமிக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது ,அதிர்ச்சியில் எழுந்து நின்றான்

”என்ன சொல்ற … 10 மாச குழந்தையா…?கருப்பு… கருப்பு …

” ஆமா… ஒரு பெரிய கோடீஸ்வரன்  சின்னவீடு வச்சிருக்கான், குடும்பத்துல அதக்கூட ஏத்துக்கிட்டாங்க, ஆனா அதுக்கு பொறந்த ஆண் குழந்தைய ஏத்துக்கமுடியல …சொத்துக்காக இந்த கொலை , அதப்பத்தி நமக்கென்ன, 10 லட்சம் எவன் குடுப்பான்… சொல்லு… ”

”கருப்பு..அதுக்காக பச்ச குழந்தைய ….”

”ஏய் ..இதோ பாரு எனக்கு  தேவை பணம் அவ்ளோ தான்.. குழந்தையோ ,கிழவனோ …புடிச்சா இரு , இல்லாட்டி போயிட்டே இருன்னு சொல்லி இதுக்கு மேல உன்னைய கழட்டிவிடவும் முடியாது ,எல்லா விஷயமும் உனக்கும் தெரிஞ்சுருச்சு ..கண்ணமூடிட்டு வெட்டீரு , இல்ல உன்னையும்  இதே  இடத்துல தோண்டி பொதச்சிட்டு போயிருவேன்…சொல்லிட்டேன்”

இதைக்கேட்ட சாமியின் முகம் வெளிறிப்போனது..நீண்ட அமைதி நிலவியது ..,இருவரும் குடித்தார்கள், பேசிக்கொள்ளவில்லை . எதுவும் பேசாமல் சாமி எழுந்து நடந்தான் , மண்வெட்டியை எடுத்து வந்து குழி வெட்டினான் ,கருப்பு அவனை பார்த்து சிரித்தான் .குழி பெரிதாகிக்கொண்டே போனது …

”இப்ப மணி 12.30 ஆவுது நான் போயிட்டு 2 மணிக்குள்ள  குழந்தையோட வர்றேன் , கொன்னு புதைச்சிட்டு விடியறதுக்குள்ள போகணும் ..நான் வர்றேன் ”

”சரி..யாராவது என்ன பாத்துட்டா …”

பயப்படாத… இங்க யாரும் வரமாட்டாங்க …

ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு நடந்தான் …கருப்பின் உருவம் இருட்டில் மறைந்தது . இப்படி வசமாய் மாட்டிக்கொண்டோமே என்று நினைத்தான் சாமி . மீண்டும் நிறைய குடித்தான்..அழுதபடியே , காமாட்சி அம்மனை திட்டிய படியேகுழியை வெட்டி முடித்தான்.தூரத்தில் கருப்பு வரும் சத்தம் கேட்டது.அவனை பார்த்ததும் சாமிக்கு மீண்டும் அதிர்ச்சி .காரணம் கையில் குழந்தை இருந்தது ,  தோளில் ஒரு பெண்ணின் உருவம் தொங்கியது.சாமிக்கு அதிர்ச்சியின் தொடர்ச்சியை தாங்கிகொள்ளமுடியவில்லை …அழுதுவிட்டான்

கருப்பு என்ன ஆச்சு..? யார் இந்த பொம்பள …?

அத ஏன் கேக்கற ..வீட்ட கண்டுபிடிச்சு யாருக்கும் தெரியாம உள்ள நுழைஞ்சுட்டேன் ..குழந்தைய தூக்கும் பொது தூங்கிகிட்டு இருந்த அம்மா முழிச்சிருச்சு …நல்ல வேலை சத்தம் போடறதுக்குள்ள தலகாணிய வச்சு அமுத்திட்டேன் ..அப்பயும் சாகல , கையாலேயே கழுத்த நெரிச்சு கொன்னுட்டேன் …இப்படிதான்

என்று அந்த பெண்ணின் கழுதை அமுக்கி காட்டினான் ,அவள் கண்கள் இரண்டும் பிதுங்கி வெளியே வந்தது , சாமி முகத்தை திருப்பிக்கொண்டான் .

இதுக்கே பயந்தா எப்படி சாமி ….பாக்க அழகா வேற இருந்தாளா…

வேணாம் …போதும் போதும்

என்று காதை பொத்தினான்.. சத்தமாக சிரித்தபடியே குழியை எட்டிப்பார்த்தான் கருப்பு, அந்த பெண்ணின் உடலை உள்ளே தூக்கிப்போட்டான்..குழந்தையை எடுத்து வெளியே வைத்தான் ..

கருப்பு.. கருப்பு.. ஒரு கொலைன்னு தானே சொன்ன …இப்போ

ஆமாடா ..என்ன பண்றது அந்த பொம்பள பாத்துட்டா..வேறவழி இல்ல அதான் …சரி ..நான் ஒன்னு நீ ஒன்னு..அம்மாவ நான் கொன்னுட்டேன் குழந்தைய நீ கொன்று

சுக்கு நூறாய் நொறுங்கியது சாமியின் இதயம் ,கண்கள் இரண்டு நிமிடம் இமைக்கவில்லை . செய்வதறியாது சிலையாய் நின்றான்.ராணியை நினைத்துப்பார்த்தான் , நீண்ட நேரம் கடவுளை வேண்டினான்..வேறு வழியில்லாமல் மனதை கல்லாக்கிக்கொண்டான்.அவனைப்பார்த்த கருப்பு சிரித்தபடியே..

சொல்றத கேளு …அரிவாள நல்லா இருக்கமா புடிச்சுக்கோ.. கண்ண மூடிட்டு ஓங்கி வெட்டீரு.. தலை தனியா போயிரனும்.. இந்த  சரக்க போட்டுக்கோ நல்லா..ஒன்னும் தெரியாது …இந்தா …

வாங்கிக்குடித்தான்..குழந்தையை பார்த்தான் , மிகவும் அழகாக இருந்த அந்த குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தது .அரிவாளை கையில் எடுத்தான்,  இறுக்கமாக பிடித்தான், மூச்சு வாங்கியது. ராணியை நினைத்தான் காமாட்சி அம்மனை வேண்டினான்  ..முதன்முதலாக கொலை செய்கிறேன் என்னை காப்பாத்து என்னை காப்பாத்து  என்னை காப்பாத்து என்றபடியே அரிவாளை ஓங்கினான் . கண்களை மூடிக்கொண்டான் , முழு பலம் கொண்டு ஓங்கி வெட்டினான் ..இவன் முகத்தில் ரத்தம் தெளித்தது ,கண்ணை திறந்து பார்த்தான் தலை துண்டாக போய் விழுந்தது . குழந்தையின் உடலில் ரத்தம் பரவியது .உடலை எட்டி உதைத்தான்,உருண்டு குழியில் விழுந்தது .தலையை எடுத்து வந்து குழியில் போட்டுவிட்டு குழியை மூடினான் ..பணத்தையும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு  ஓடினான்.கருப்பு கூறியது நினைவுக்குவந்தது..

”இது தான் எனக்கும் கடைசி இதுக்கப்புறம் நானும்  இங்க இருக்கவே மாட்டேன், யாரும் பாக்காத இடத்துக்கு போயிரலாம்னு இருக்கேன்”

கொலை -2

நவம்பர் 30, 2009

முதல் பாகத்தின் (கொலை -1)தொடர்ச்சி ….

கொலை செய்ய துணிந்த சாமி யார் பார்வையிலும் பட்டுவிடாமல் தனியாகவே இருந்தான் .ராணியின் தொலைபேசி அணைந்து  போய் இருப்பதாகவே தகவல் வந்தது .கடற்கரையில் நன்றாக உறங்கினான் மாலை வரை .மீண்டும் ராணியின் தொலைபேசி எண்ணை அழுத்தினான் ,இந்த முறை மணி அடித்தது .மறுமுனையில் ராணியின் குரல்…. ”அழுகாத… அழுகாத… அழுகாதன்னு  சொல்றேன்ல…நாளைக்கு காலைல பத்து மணிக்கு கும்பகோணத்துல இருப்பேன் ..உன் பெரியம்மா வீடு முன்னாடி ..சும்மா இல்ல கை நிறைய காசோட ஆமா… கார்ல வர்றேன்…உன்வேலை யாரும் பாக்காத நேரத்துல யாருக்கும் தெரியாம ஓடி வந்து கார்ல ஏறுறதுதான் ..சரியா , சந்தோஷமா இரு , எல்லாம் நல்லா நடக்கணும்னு வேண்டிக்கோ. நேர்ல சொல்றேன் ,பத்து மணி,  பத்து மணி,  பத்து மணி… அழுகாத.. எனக்கும் வருது ,சந்தோஷமா இரு நான் வைக்கிறேன் .போனை வைத்துவிட்டு பெரு மூச்சு விட்டான்.

கடற்கரையில் வந்து அமர்ந்தான் ,நேற்று இரவு யோசித்தது ஞாபகம் வந்தது கையில் கர்சீப் கட்டிக்கொள்ளவேண்டும் , கொலை செய்த பின் கத்தியை கருப்புவிடம் தந்துவிடக்கூடாது , போகும் வழியில் எங்காவது ஆற்றிலோ குளத்திலோ வீசிவிடவேண்டும் , எங்கு போகிறோம் என்பதை கருப்புவிடம் சொல்லக்கூடாது , சொன்னாலும் தவறாகவே அனைத்தையும் சொல்லவேண்டும் ,கொலை செய்வதற்கு முன்பே பணத்தை வாங்கிவிட வேண்டும் , கொலை செய்த உடலை நாம் தான் புதைக்க வேண்டும் கருப்பை நம்பி கொடுக்க கூடாது ஏனென்றால் அவன் குடிகாரன் .இருட்டாகிவிட்டது… மணியைப்பார்த்தான் ஒன்பதை நெருங்கியது , கடற்கரையிலிருந்து கிளம்பினான்.

காமாட்சி அம்மன் கோவில் முன்பு நின்றான் ,மிகவும் பக்தியோடு அழுதபடியே வேண்டினான் ”முதல்முறையாக ஒரு பாவம் செய்ய போகிறேன் ,நான் யாரை வெறுத்தேனோ   அவனோடு சேர்ந்து இருக்கிறேன் , பணத்திற்காக கொலை செய்ய துணிந்து விட்டேன் , என்னை நேசித்த அன்பு உள்ளத்திற்காக இதை செய்வது இப்போதும்  சரியாகவே படுகிறது காரணம் ஒருவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு பிரச்சனை வராது, கெட்டவனுக்கே பகையும் பிரச்சனையும் வரும், நான் கொல்லப்போகும் ஆளும் கெட்டவனாகவே இருக்க வேண்டும் , யாரும் பார்க்காதபடி சரியாக செய்யவேண்டும் ,எனக்கும் கருப்புவுக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது ,காப்பாத்து என்னை  காப்பாத்து என்றபடியே கையில் இருந்த தேங்காயை தரையில் அடித்தான்”’.

சரியாக 11 மணி , கருப்பு வந்தான் .அவன் தோளில் பெரிய பை தொங்கியது .இருவரும் ஆட்டோவில் ஏறினார்கள் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை .கருப்பு பையை திறந்து மெதுவாக காட்டினான் உள்ளே 100  ரூபாய் கட்டுகள் அடுக்கியிருந்தது அதற்க்கு மேலே இரண்டு சரக்கு பாட்டில் , இருவரும் சிரித்தார்கள் .ஆட்டோ நெடுஞ்சாலை ஓரம் நின்றது ,இருவரும் இறங்கி நடந்தார்கள். தூரத்தில் சிறிய கோவில் தெரிந்தது கருப்பு மட்டும் உள்ளே சென்றான் வெளியே வரும் போது கையில் மண் வெட்டியும் அரிவாளும் இருந்தது . இருவரும் ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தை    தேர்வு செய்தார்கள். ”ஆள் யார் ”? என்றான் சாமி , ”முதலில் குடிக்கலாம் சொல்கிறேன்” என்றான் கருப்பு . இருவரும் குடித்தார்கள் .மீண்டும் ”ஆள் யார் ”? என்றான் சாமி.”நானும் அப்படித்தானே நெனச்சுட்டு போனேன் ஆனா… ஆள் இல்ல , கொல்ல போறது 10 மாச  குழந்தைய என்றான்”.

தொடரும் …..

கொலை-1

நவம்பர் 28, 2009

சற்று பெரியதாக இந்த கதை இருப்பதால் இரண்டு அல்லது மூன்று பாகமாக எழுதுகிறேன் பொறுத்துக்கொள்ளவும்  . நேரமில்லாத காரணத்தால்தொடர்ந்து  எழுத முடியவில்லைஅதற்காக மன்னிக்கவும்

”நீதான் எனக்கு எல்லாமே …. என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது .இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.நீமட்டும் வந்து என்ன கூட்டிட்டுபோகல கண்டிப்பா நான்செத்துபோயிருவேன் சொல்லிட்டேன்”  ”கண்டிப்பா நான் வந்து உன்ன கூட்டிட்டு போறேன் நீ கவலைப்படாத ..ரெண்டு பேரும் என் சொந்த ஊருக்கு போயிறலாம்.அங்க நம்மள ஒன்னும்  பண்ணமுடியாது உங்கழுத்துல நான்தான் தாலிகட்டுவேன். நிம்மதியாதூங்குஎன்ன     நான்வைக்கறேன்”.

போனை வைத்தசாமிக்கு பல வித யோசனை .மூன்று வருடமாக காதலித்த பெண்ணுக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது எவ்வளவோ கூறியும் ராணியின் பெற்றோர் சம்மதிக்கவில்லை .ராணியை பற்றி சாமிக்கு நன்றாக தெரியும் அவள் சொன்னால் கண்டிப்பாக அதை செய்து விடுவாள் என்று . சாமி ஒரு ஹோட்டலில்  வேலை செய்கிறான், ராணி +2 படித்துவிட்டு வீட்டில் இருக்கிறாள். ஹோட்டலில்எந்த வேலையும் செய்யவில்லை ஜன்னலின் வெளியே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் .முதலாளி இவனை பார்த்து கத்தினார் ”ஏய் அங்க என்ன அமிதாப் பச்சனா நிக்குறாரு.போடா மூஞ்சியப்பாரு அஞ்சு ரூபா நோட்டு மாதிரி” அப்படியும் வேலை செய்ய தோணவில்லை ராணியின் வாசமே அடித்தது அவனிடம் . கஸ்டமர் ஒருவர் சாப்பிட என்ன இருக்கு என்றார் ..மீண்டும் கேட்டார் பல முறை கேட்டார் சாமியின் தரிசனம் கிடைக்கவில்லை .கோபமாய் கத்தினார், நிதானமாக திரும்பி ”என்ன கேட்டீங்க”  என்றான். ”மூட்டப்பூச்சி மருந்து இருந்தா குடு” என்றார் ”சாப்பிடவா பார்சலா” என்றான். ஹோட்டலில் சண்டை நடந்தது .முதலாளி இவன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் .வேலை போனதில் மிகவும் மகிழ்ச்சி .ராணியை எப்படி கடத்துவது என்ற யோசனைக்கு வந்தான் .அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்றான்,  எப்போதும் பல தாத்தாக்கள் கூடி பேசும் இடம் அது .சிலர் தாடி தாகூரை ஞாபகப்படுத்தும் .யோசித்துக்கொண்டே இருந்தான் பகல் படுக்கைக்கு சென்றது ..பூங்காவை விட்டு வெளியே வந்த போது அந்த உருவத்தை கண்டான் .

தள்ளாடியபடியே வந்த அந்த உருவம் ”கருப்பு” .அவன் ஒரு மீனவன்… கடலிலும் தரையிலும் தண்ணியிலே இருப்பான்,எப்போதும்  யாரும் அவனை சேர்த்துக்கொள்வது இல்லை பிரச்சனைக்குரியவன் என்பதால்.இவனைப்பார்த்து ”டேய் வா  கொஞ்சம் குடிக்கலாம்” என்றான் . என்ன நினைத்தானோ தெரியவில்லை அவன் கூட சென்று விட்டான்,இதுவரை பார்க்காத ஒரு இடத்தில இருந்தான்..இருவரும் குடித்தார்கள் .சாமி அவனிடம் ”எனக்கு கொஞ்சம் பணம் வேணும் ”என்றான். ”ராணிய கட்டிக்க தானே எல்லாம் எனக்கு தெரியும் ஒரு மேட்டர்இருக்கு வர்றியா..நான் நீ ரெண்டு பேரு தான் யாருக்கும் தெரியாது .உனக்கு அஞ்சு எனக்கு அஞ்சு என்ன சொல்ற” என்றான். மேட்டர் என்றால் கொலை . இதை கேட்டதும் சாமிக்கு குப்பென்று வியர்த்தது . ”இல்ல..  எனக்கு பழக்கம் இல்ல.. வேணாம், பணம் இருந்தா குடு” என்றான்.”இது தான் எனக்கும் கடைசி இதுக்கப்புறம் நானும்  இங்க இருக்கவே மாட்டேன், யாரும் பாக்காத இடத்துக்கு போயிரலாம்னு இருக்கேன் . பெரிய இடம், நிறையா பணம், பிரச்சனையே வராது.. நல்லா யோசிச்சு சொல்லு” .
”இன்னொரு ஆப் சொல்லு” என்றான்.. குடிக்க குடிக்க போதை தெளிந்தது .”அஞ்சு னா  அஞ்சாயிரமா” என்றான் சாமி . ”பன்னி,பரதேசி ,கபோதி ,கஸ்மாலம்…அஞ்சு லட்சம் டா” என்றான். இதை கேட்டதும் சாமிக்கு ஜில்லென்று இருந்தது, இன்னொரு ஆப் சொல்லு என்றான்.சாமி நீண்ட யோசனையில் இருந்தான் , ராணியை பற்றி யோசித்தான் அவள் மிகவும் நல்லவள் ,அன்பானவள் ,அழகானவள் அதைவிட என்னை மிகவும் காதலிப்பவள் . அவளுக்காக எதையும் செய்யலாம் ஆனால் கருப்பு மிகவும் மோசமானவன் ,எதையும் செய்ய துணிந்தவன் யாருக்கும் துரோகம் செய்ய தயங்காதவன், கொலை செய்வது ஜெயில் செல்வது அவனுக்கு புதிதல்ல .உடன் இருப்பவர்களை கூட காட்டிகொடுத்து விடுவான் .இப்படி பல வித யோசனையில் இருந்தான் சாமி.இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான் காதலுக்காக கொலை செய்யலாம்என்று.கருப்பு கூறினான் மணி இப்ப 11 நாளைக்கு பதினொண்ணுக்கு இதே இடத்தில சந்திக்கலாம் நான் போய் பார்ட்டிய பாத்து  பணத்த வாங்கிட்டு போட வேண்டிய ஆளையும் விசாரிச்சிட்டு வந்தர்றேன் .இருவரும் பிரிந்தார்கள், சாமி மாட்டிகொள்ளாமல் வேலையை முடிக்க திட்டம் தீட்டினான்,கொலை செய்ய போகும் கைகளை ஒருமுறை பார்த்தான் அதில் ராணி வைத்த மருதாணியின் சிவப்பு வட்டம் தெரிந்தது .

தொடரும் …

பூனை

அக்டோபர் 28, 2009

எனது ஓவியங்களை விற்பனைக்கு வைத்திருந்தேன். நான் அழைத்த எல்லா பிரமுகர்களும் வந்திருந்தார்கள். எனது ஓவியங்கள் எல்லாம் 1000ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை இருக்கும், ஒன்றைதவிர. அந்த ஓவியம் மட்டும் 75,000 ரூபாய், காரணம் அதை யாரும் வாங்கிவிட கூடாது என்பதற்காகத்தான். மிகவும் அழகான  பூனையின் ஓவியம் அது. வறுமையின் காரணமாக ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக சேர்ந்துவிடலாம் என்று நினைத்தேன். இந்த பூனை என்னை முழு நேர ஓவியனாக மாற்றியது. இன்று நான் வசதியோடு வாழ்வதற்கு காரணமும்  இந்த பூனை தான்.

சரியாக எட்டு வருடங்களுக்கு முன் ஒரு தனியார் பள்ளியில் வேலை கிடைத்தது. அந்த பள்ளியின் நிறுவனர் ஒரு பெண், மிகவும் பிரபலமானவர். அவர் திங்கள் முதல் வேலைக்கு வந்துவிடுங்கள் என்று கூறி ஒரு நிபந்தனையை  வைத்தார். அவருக்கு ஒரு ஓவியம் வரைந்து தர வேண்டுமாம், அதுவும் தன் மகளை ஓவியமாக வரைய வேண்டுமாம். சரி என்று கூறி மறுநாள் அவர் வீட்டிற்க்கு இல்லை மாளிகைக்கு சென்றேன்.  கடற்கரை நெடுஞ்சாலையை ஒட்டி பிரமாண்டமாய் இருந்தது அவருடைய இல்லம். ஒருவித பிரமிப்போடே உள்ளே சென்றேன். என் பெயரை கூறியவுடன் உள்ளே அழைத்தார்கள். காலை உணவு, தேநீர் தந்தார்கள் கூடவே ஒரு பாக்கெட் சிகரெட்டும். சரியாக ஒரு மணி நேரம் கழித்து பள்ளி நிறுவனர் வந்தார். அவரை பார்த்தும் எழுந்து நின்றேன். என்னை பார்த்து சிரித்தபடியே தலையசைத்துவிட்டு வெளியே சென்றார். அடுத்த சில நிமிடங்களில் வேறொரு பெண் என்னை அழைத்தாள், மூன்றாவதுமாடியில் எனக்காக ஒரு அறை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் என்னையும் தேவையான விஷயங்களையும் தயார் செய்து கொண்டேன். சிறிது நேரத்தில் அந்த பெண் வந்து ”அம்மா வருகிறார்கள் என்றாள்”, மீண்டும் எழுந்து நின்றேன்.

இருபது வயதில் ஒரு தேவதை வந்தாள். கையில் ஒரு குட்டி பூனையுடன், இப்படி ஒரு அழகியா  என்று வியந்தேன். ”உங்கள் பெயர் என்ன” என்றாள் நான் ”சாமிநாதன்” என்றேன். அவள் உடை ஒரு வெள்ளைக்கார இளவரசியை ஞாபகப்படுத்தியது. பேரழகியை நேரில் பார்த்து வரைகிறோம் என்கிற சந்தோசம் என் உடல் முழுதும் பரவியது. கை குலுக்கினாள் என் உள்ளமும் குலுங்கியது, ஓவியம் தீட்டினேன் அழகில் கரைந்து வண்ணமானது என் எண்ணம். ”சிகரெட்”  என்றாள் என்னை பார்த்து, நான் சிரித்தேன். ”தயவு செய்து..” என்றாள். சிகரெட்டை பற்றவைத்த  நான் தரையில் இல்லை. ஏனென்றால் வரையும் போது வாயில்சிகரெட் புகைந்துகொண்டே இருக்கவேண்டும் எனக்கு.  சாதாரணமான எனக்கு இவ்வளவு மரியாதையா என மேல்தட்டு மக்களை நினைத்து பெருமைப்பட்டேன். குட்டி பூனை அவளை  சுற்றி சுற்றி வந்தது, மஞ்சள் நிறத்தில் நீளமான முடியுடன் பார்க்க மிக அழகாக இருந்த அந்த பூனை, நிச்சயம் வெளிநாட்டு இறக்குமதியாகத்தான் இருக்கவேண்டும். பார்க்க தலை வால் புரியவில்லை, அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது. அந்த தேவதை  கொஞ்சம் கொஞ்சமாக ஓவியமானாள், வரைந்து முடிக்கப்போகும் வேளையில்என் மனதில் தோன்றிய  ஒரு விஷயத்தை அவளிடம் கூறினேன். அது ”உங்கள் மேலாடையின் முதல் பட்டன் இல்லாமல் இருப்பதாக வரைந்து கொள்கிறேன். அப்போது ஓவியம் இன்னும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும்”. உடனே அவள் ”நீங்கள் சொல்வது சரி தான்… கற்பனையில் வரையவேண்டாம் நானே கழற்றி விடுகிறேன்” என்று கூறி    மேலாடையின் மேல்இரண்டு பட்டன்களை    கழட்டினாள். அவள் அழகு பெருக்கெடுத்து ஓடியது, அதில் அடித்து சென்ற  எனக்கோ பெரும் அதிர்ச்சி  காத்திருந்தது.

பொம்மை போல் சுற்றி திரிந்த அந்த வெளிநாட்டு பூனை வண்ணங்கள் வைத்திருந்த மேஜையின் மீது ஏறி ஓடி, தண்ணீர் வைத்திருந்த பாத்திரத்தை தட்டி விட்டது. நான்பதறி ஓவியத்தை எடுக்க முயல, அதற்குள் ஓவியத்தின் பல  இடங்களில் தண்ணீர் பட்டது.  உறைந்து போய் நின்றேன்,தண்ணீர் பட்ட இடங்களில் எல்லாம் ஓவியம் கரைய ஆரம்பித்தது வண்ணம்  காயாததால். அந்த தேவதை நிறம் மாறுவதை என்னால் பார்க்க முடியவில்லை, கண்களை மூடிக்கொண்டேன் கண்ணீர் வந்ததால். அப்பொழுதும் சிரித்துக்கொண்டே கூறினாள்..” பரவாயில்லை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்”. ”இல்லை நான் நாளைக்கே வந்து மீண்டும் வரைந்து தருகிறேன்”  என்றேன், சிரித்துக்கொண்டே ”சரி” என்றாள். இதற்காகவங்கியில் சேமிப்பு கணக்கே இல்லாத எனக்கு 5000 ரூபாய் காசோலை தரப்பட்டது, கவனக்குறைவாக இருந்துவிட்டோமே என்று என்னை நானே திட்டிக்கொண்டேன். கோபத்தில் வண்டியை உதைக்க உடனே உறுமியது. வேகமாய் வண்டியை கிளப்ப நெடுஞ்சாலையில் கூட்டம் கூடியது. விபத்து என்பதை அறிந்து ஓடிச்சென்று பார்த்தேன். வேகமாக வந்த காரில் அடிபட்டு சிதறிக்கிடந்தது அந்த மஞ்சள் நிற வெளிநாட்டு பூனை. கார் டிரைவர்  கூறினான் இந்த பூனை பறந்து வந்து என் காரின் மீது விழுந்தது என்று. இதை கேட்டு என் இருதயம் நின்றது, அதிர்ச்சியில் அந்த வீட்டை நோக்கி திரும்பினேன். பால்கனியில் இருந்து உள்ளே சென்று மெதுவாக கதவை மூடினாள் அந்த தேவதை…

கால் பந்தாட்ட வீரன்

அக்டோபர் 27, 2009

இது கற்பனை  கதை தான் என்றாலும்  விவாதிக்க இந்த கதையில் நிறைய இருக்கிறது ஆனால் தவிர்க்கவே விரும்புகிறேன்  .இதுவும் குரும்படத்திற்க்காக எழுதிய சிறுகதைதான் . சற்று சுருக்கமாக எழுதியிருக்கிறேன் . முரளி ரூம் என்றால் அந்த மேன்சனில் அனைவருக்கும் தெரியும் . முரளியை பார்க்க அவன் நண்பன் வந்தான் . கதவு பாதி திறந்து  இருந்தது , உள்ளே எட்டி பார்த்தான் . அந்த அறையில் இரண்டு கட்டில் போடப்பட்டு இருந்தது .
இரண்டிலும்  தலையோடு போர்த்தியபடி இரண்டு உருவம் கிடந்தது . யாரை எழுப்புவது   என்று குழம்பியபடி ”மோகா …மோகா”  என்று கூப்பிட்டான் . சத்தம்கேட்டு   போர்வையை   விலக்கிக்கொண்டு மோகனமுரளி எழுந்தான் . இவன் ஒரு கால்பந்தாட்ட  வீரன்

வாமாப்ள..முன்னாடியே  வந்துட்டியா…

இல்லடா இப்பதான் வந்தேன்,இது யாரு உன் தம்பியா…

ஆமாம்..நைட் லேட்டா வந்தான்,அதான் இன்னும் தூங்கறான்

மணி 10.20 ஆச்சு ..10.30க்குமேட்ச் சீக்கிரம் கிளம்பு..போய் குளிச்சுட்டு வா…நம்ம  ராஜமுந்திரி போய் அஸ்வின கூட்டிட்டு அப்புறம் தான் மும்பை போகணும் .

அப்படியா… அவன ரெடியா இருக்க சொல்லு அப்ப…

அவன் ரெடியாதான் இருப்பான்…

ம்ம்ம்…நைட் எத்தன மணிக்கு லண்டன் போகணும்

ஓ….மான்செஸ்டர்,செல்சி மேட்ச் வேற இருக்கில்ல , மறந்தே போயிட்டேன் .10.30 க்குமேட்ச்…மும்பை ல இருந்து அப்படியே லண்டன் போயிரலாமா..

இல்லஇல்ல..இங்கவந்துட்டே போலாம், தம்பிய பாக்கணும்..10மணிக்கு கிளம்புனா போதாது..

போதும் போதும் ..  இன்னைக்கு மட்டும் ஜெயிச்சா காந்தி கையால கப்  வாங்கிரலாம் ..பீலே  குட நின்னு போட்டோ எடுத்துக்கலாம் மச்சான்.

சொல்லாத எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது

சரி நீ போய் குளிச்சுட்டு வா… நான் வீட்டுக்கு போயிட்டுவந்தர்றேன்

வீட்டுக்கா எங்க..மதுரைக்கா..

ஆமாம்   குல தெய்வம் கோயிலுக்கு …

என்னையும் கூட்டிட்டுபோடா

மச்சான் இப்பவே டைம் ஆயிருச்சு …குளிச்சுட்டு  மதுரை போயிட்டு…அப்புறம் ராஜமுந்தரி போய் அஸ்வின கூட்டிட்டு மும்பை போக முடியுமா ..இன்னும் 10 நிமிஷம் தான் இருக்கு, போடா..

சரி..நீ லேட் பண்ணிறாத…

ம்ம்ம்..

மோகன முரளி    கிளம்புவதற்குள் அவனும் மதுரை சென்று  வந்துவிட்டான் . இருவரும் மும்பைக்கு விளையாட சென்றார்கள். யாரோ கதவை தட்டினார்கள் , கட்டிலில் கிடந்த இன்னொரு உருவம் நெளிந்தது …ஒருவன் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான் .  ”பாலா… பாலா”…என்றுகூப்பிட பாலமுரளி மெதுவாக எழுந்தான். வாட்சை பார்த்தவுடன் …

அய்யய்யோ 12 மணியா… தம் இருக்கா

ம்ம்ம்..

இரு.. ஷிட் அடிச்சுட்டு  வந்தர்றேன்..

என்று அறையிலிருந்து வெளியே போக , நண்பனும் சிகரட்டை பற்றவைத்து விட்டு  கட்டிலில் உட்கார்ந்தான் . தலையணைக்கு அருகில் ஒரு புத்தகம் இருந்தது ,  அதை எடுத்து புரட்டினான் .  அதிலிருந்து ஒரு போட்டோ விழுந்தது .மோகனமுரளியும் பாலமுரளியும் பேசிக்கொண்டிருக்கும் போட்டோ . இதே அறையில் எடுத்தது..               அதைரசித்துபார்த்துக்கொண்டிருந்தான்.பாலமுரளி உள்ளே வர …

மாப்ள …இதுல யார் நீ.. யார்அண்ணன் ..

வெள்ள சட்டை  நான்.. பனியன் என் அண்ணன்…

என்னடா அப்படியே ஒரே மாதிரி இருக்கீங்க ..ஒட்டிகிட்டே பிறந்தீங்களா

நான் பொறந்து ஒரு  நிமிஷம் கழிச்சு அவன்பொறந்தான்.

பயங்கரமான கால் பந்து வீரனாமே ….

ம்ம்ம்ம் ….ஸ்டேட் பிளேயர் , நல்லா  ஆடுவான்

என்ன சொல்றதுனே தெரியல ….எவளோ நாள் மாப்ள ஆச்சு .

ஒரு வருஷம், ம்ம்..பத்து மாசம் , ம்ம்ம்…. பதினெட்டு நாள்

எங்க …

அடையார்ல …பைக்ல

ஸ்பாட்லயேவா மாப்ள …

ம்ம்ம்..அங்கேயே இறந்துட்டான்  , அந்த பஸ் காரன் மேல கேஸ் போட்ருக்கு ,அவ்ளோதான்..சரி நான் போய் குளிச்சுட்டு வந்தர்றேன்  ….

ம்ம்ம்ம்… நாயே  நீ போயிருக்கலாம் அவனுக்கு பதிலா …ரம்யாவ நான் கரெக்ட் பண்ணிருப்பேன், ம்ம்ச்ச்….

தீபாவளி ரிலீஸ் – குட்டிகதை

அக்டோபர் 14, 2009

இது கற்பனை கதையல்ல ,    கற்பனை கலந்த கதை  . பெயர் மாற்றத்தோடு சிறு திருத்தம் மட்டுமே செய்திருக்கிறேன் .

”தீபாவளி முதல் உலகமெங்கும்”  என்று அன்றைய பத்திரிக்கைகளில் முதல் பக்கத்திலேயே வந்துவிட்டது . அது கடைசி நாள் ஷூட்டிங் ,  பரபரப்பாக வேலை நடந்துகொண்டிருக்கிறது . தயாரிப்பாளர் ”மாலை 4.3௦ மணிக்கு மேல் ஷூட்டிங் நடக்ககூடாது” என்றும் ”4 முதல் 4.3௦ வரை நல்லநேரம் ,எனவே அதற்குள் முடித்துவிட்டு பூசணிக்காய் உடைத்துவிடவேண்டும்” என்றும் திட்டவட்டமாக கூறி சென்றுவிட்டார் . நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பதால் அனைவரின் ஒத்துழைப்பும் முழுமையாக இருந்தது . மதிய உணவு இடைவேளை இல்லை என்று அறிவிக்கப்பட்டும் எந்தவித சலசலப்பும் இல்லை . வேகமாக நடந்துகொண்டிருந்த ஷூட்டிங் திடீரென்று  நின்றுவிட்டது , காரணம் ஒரு போன் கால் . அது உதவி இயக்குனர் கண்ணனுக்கு வந்தது …போனில் பேசிக்கொண்டிருந்த கண்ணன் அப்படியே மயங்கி விழுந்துவிட்டான் . அனைவரும் ஓடி வந்து அவனை தூக்குகிறார்கள் , முகத்தில் தண்ணீர் தெளிக்க.., கண் விழித்த கண்ணன் ”என் தாய்… என் தாய் தவறிவிட்டார்கள்” என்று கூறி நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுகிறான்.

இதைகேட்ட அனைவரின் இருதயமும் ஒரு நொடி நின்றேவிட்டது, எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் …மொத்த ஷூட்டிங்கும் ஸ்தம்பித்துவிட்டது , இதற்கு காரணம் சரியாக 7 நாட்களுக்கு முன்பு கூடலூரில் ஷூட்டிங் முடித்துவிட்டு வரும்வழியில், ஊட்டியில் கண்ணனின் வீட்டில் மதியஉணவு சாப்பிட்டது தான் . கண்ணனின் அம்மா வீட்டில் இருந்த 3 கோழியையும் அடித்து சமையல் செய்திருந்தார் . சிறிய வீடு தான் ,ஆனால் அங்கே அன்பு நிறைந்து வழிந்தது. அனைவரையும் தன் பிள்ளையை போலவே கவனித்தார் …. மண்சட்டியில் செய்த நாட்டுக் கோழி குழம்பை ரசித்து, ருசித்து ,வழித்து விரலை சப்பினார்கள்அனைவரும் . இயக்குனரும் எந்தவித கூச்சமும்இல்லாமல் போட்டிபோட்டுக்கொண்டு சாப்பிட்டார் ,  பிறகு ஒரு டம்ளர் ரசம் வேறு வாங்கி குடித்துவிட்டு பாராட்டினார் . மிகவும் அன்பான தாயார் , எங்களை அற்புதமாக கவனித்துக்கொண்டார்,   கண்ணன் வீட்டிற்க்கு ஒரே பிள்ளை வேறு …

அனைவரும் கண்ணனை கட்டிபிடித்துக்கொண்டு அழுகிறார்கள் . தகவல் தெரிந்து இயக்குனர், ஹீரோ , ஹீரோயின்  அனைவரும் கேரவேனில் இருந்து ஓடிவருகிறார்கள்.கண்ணனை பார்த்ததும் இயக்குனருக்கு அழுகை வந்துவிட்டது , அவனை சமாதானப்படுத்த முயல்கிறார் , முடியவில்லை .அவன் தரையில் புரண்டு அழுகிறான் . கண்ணனிடம்   ” தகவலை கூறியது யார் ” என்று கேட்க  ” அப்பா  ” என்று கூறினான் . எனவே தகவல் சரிதான் என்று அப்பாவின் நம்பரை வாங்கி தொடர்பு கொண்டார் . இருவருக்குமே நல்ல பரிச்சையம் உண்டு , தொலை பேசியில் மணி அடித்து . இயக்குனர் ” அப்பா… நான் சென்னையில் இருந்து கண்ணனின்  இயக்குனர்  பேசுகிறேன்… , அப்பா நான் பேசுவது கேட்கிறதா..?அப்பா..சென்னையில் இருந்து இயக்குனர்  பேசுகிறேன் அப்பா .. அப்பா என்று கேட்கிறார் . ஜெனரேட்டர் சத்தம் , இரைச்சலில் சரியாக கேட்கவில்லை . மீண்டும் அப்பா… கண்ணனின் தாய் தவறிவிட்டார்களாமே …? மிகவும் வேதனையாக இருக்கிறது.., நான் பேசுவது கேட்கிறதா ..? பேசுவது கேட்கிறதா அப்பா…அப்பா ..அப்பா?என்று பரிதாபமாக கதறுகிறார் . மறுமுனையில்   கண்ணனின் அப்பா  ” என்னது தாயா… நான் நாய் செத்து போச்சுன்னு தானே அவனிடம் சொன்னேன் ” என்றார் . இயக்குனரின் முகம் இறுகியது , விஷயமறிந்து அனைவரும் சிதறி ஓடி வெடித்து சிரித்தார்கள் , கண்ணனுக்கோ இயக்குனர் கையால் அடி விழுந்தது.

kaatru

அக்டோபர் 10, 2009

திடீரென்று  தூரத்தில் என் தம்பியின் உருவம் .அதிர்ச்சியடைந்துவிட்டேன்,ஆச்சரியத்தில்உற்றுப்பார்க்கிறேன். இல்லை, என் தம்பியின் உருவம் இல்லை , ஆனால் பார்க்க என் தம்பியை போலவே இருக்கிறது . அவன் யாருக்காகவோ காத்துக்கொண்டிருக்கிறான் என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிகிறது . எனக்கும் பொழுது போகவில்லை , சரி என்ன  செய்கிறான் என்று பார்ப்போம் என ஒரு முடிவோடு உட்கார்ந்து விட்டேன் … உட்கார்ந்தேவிட்டேன் .  எனக்கு இன்னும் ஆச்சர்யம் தான் ,  எப்படி என் தம்பியை போலவே என்று .  என் தம்பிக்கும் எனக்கும் இடையே நல்ல நட்பு ஓடுகிறது அதை கரையாத சிகரெட் என்று சொல்லலாம்   . சிகரெட் பிடிக்காதவர்களுக்கு எப்படித்தெரியும்  ,  சரி  .. குறையாத இளநீர்  என்று சொல்லலாம் , அவனை பார்த்தால் ஏதோ  குழப்பத்தில் இருப்பதை போல … ஒரு  பெண்ணுக்காக காத்திருப்பதை போல இருக்கிறது  .  ஆனால்  என் தம்பிக்கு  தோழிகளே இல்லை , பார்க்க நன்றாகத்தான் இருப்பான்  ஆனால் யாரிடமும் தானாகசென்று பேசமாட்டான் , யாராவது இவனிடம் வந்து பேசினாலும் பதில் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவான்  . ஆனால் அன்று இரவு எனக்கு நிச்சயம் சிவராத்திரி தான் ,  அந்த பெண்ணிற்கு என் மேல் தீராத காதல் என்றே கதை விடுவான் .   அவனுக்கு ஒரு  தோழி இருக்கிறது  , அது மாம்பலம் சரவணா ஸ்டோரில் வாங்கியது .. விலை ருபாய் 160 .   குழப்பம் வேண்டாம் அது அவனுடைய தலையணை தான் . அதை வேறு யாருக்கும் தரமாட்டான் , யாரும் எடுக்கவும் மாட்டார்கள் . அதற்கு நிறைய பெயர்கள் உண்டு ,  எல்லாம் பெண்களின் பெயர்களே . இங்கே ஒரு உண்மையை சொல்லவேண்டும் , எந்த நடிகையின் பெயரையும் இது வரை அதற்கு வைத்ததில்லை .., அது ஏனென்று தெரியவில்லை . இங்கே ஒரு பொய்யையும் சொல்லவேண்டும் ..,த்ரிஷா வின் பெயரை மட்டும் வைக்க வேண்டும் என்று நினைத்தே இல்லை . பிடித்தவளின் பெயர் என்றால் கட்டிபிடித்துக்கொண்டு தூங்குவான் . பிடிக்காதவளின்  பெயர் என்றால் கடித்து வைத்து விடுவான் . நான் அவனை உற்றுப்பார்க்கிறேன்  , பதட்டமாக இருப்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது . எனக்கு இப்போது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் , ஏனென்றால் தூரத்தில் ஒரு பெண்ணின் உருவம் . அட நான் நினைத்தது சரிதான்  , அவன் ஒரு பெண்ணுக்காகதான் காத்திருக்கிறான்  .  கண்டிப்பாக இதை என் தம்பியிடம் சொல்லவேண்டும் . ஒரு பெண்ணுக்காக காத்திருந்தான் என்று சொன்னால் நிச்சயம் அவனுக்கு கோபம் வரும் . ஏனென்றால் ஒரு முறை இவனும் இப்படி காத்திருந்தான் ஒரு பெண்ணோடு பீச் செல்ல .., அதுவே அவனுக்கு கடைசி ஆகிவிட்டது . அவள்   இவனோடு ஒன்றாக பணிபுரிபவள்  ,   விடுதியில் தங்கிஇருக்கும் குன்னூர்  பெண் . அவளோடு கடலை போட கடலுக்குசென்றான்  , அவள் இதுவரை கடலை நேரில் பார்த்ததே இல்லையாம் , ஆனால் பல கடலையை பார்த்திருப்பாள் . போகும் வழியில் கோவிலை பார்க்க  , கோவிலுக்கு போகலாம் என கூறிஇருக்கிறாள் ,  இவனும் தலையசைத்து சென்றுவிட்டான் . கோவிலுக்கு  வெளியே ”காலணிகளை வெளியே விட்டுவிடவும்”  என்ற போர்டை பார்த்தவுடன் என் தம்பிக்கு   தூக்கிவாரி  போட்டது . தினமும் வீட்டுக்கு வந்ததும்  ஷூ வை கழட்டினால் பிளாட்டில் உள்ள எல்லா வீட்டுக்கதவும் அடைக்கப்படும் . காரணம் அதிலிருந்து வெளியே வரும் அற்புதமான வாசனையே . இதற்காகவே வீட்டில் எப்போதும்  3 ரூம் ப்ரெஷனர்  இருக்கும் . அவள் செருப்பை கழட்டிவிட ,  இவன் மாட்டிக்கொண்ட திருடனை போல முழித்தான் …. ஷூ வை கழட்டி விட்டு 4 அடி நடக்க ,  அவள் 40 அடி தள்ளிப்போய் விட்டாள் . அதன் பிறகு அலுவலகத்தில் பணி நிமித்தமாக கூட இவனிடம் பேசுவதில்லையாம் .  அது கூட இவனுக்கு வருத்தமில்லை,  பார்த்தாலே 20 அடி தள்ளிபோய் விடுகிறாளாம் . இதைப்பற்றி  பேசினால் ,  எனக்கும் ஒரு நேரம் வரும் என்பான் .  காற்று ஒரே திசையில் அடிக்காது , காக்கா  ஒரே திசையில் பறக்காது என்று பஞ்ச் டயலாக் வேறு பேசுவான் .                                                                                                                                                     யோசித்தபடியே உற்றுப்பார்க்கிறேன் அந்த பெண் அவனை நோக்கியே  நடந்து  வருகிறாள் . நான் என்ன நடக்குமோ என்று ஆர்வத்தின் உச்சியில் உட்கார்ந்து இருக்கிறேன் . ஆனால் அந்த பெண்ணின் உருவம் சரியாக தெரியவில்லை .  இவன் அருகில் வந்துவிட்டாள்  , அவனை பார்த்தபடியே நிற்கிறாள் , அவன்திரும்பவே இல்லை . நிச்சயம் இவர்கள் காதலர்கள் தான்… ஏனோ சிறு ஊடல் என நினைக்கிறேன் .  என்ன கோபமோ அவளை பார்த்தும் பார்க்காதது போல இருக்கிறான் . முகம் அருகே வந்து அவனை பார்த்தாள் , அவன் கன்னத்தில் மெதுவாக முத்தம்  கொடுக்கிறாள்  . நான் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன் …   அவன் முகம் மலர்ந்துவிட்டது .  என்னால் இதை நம்ப முடியவில்லை ,  நம்பாமலும் இருக்கமுடியவில்லை . சரி அவள் முத்தம் கொடுத்து விட்டாள் , பதிலுக்கு  இவன் என்ன கொடுக்க போகிறான் என்ற ஆச்சரியத்தில் மூழ்கிஇருக்கிறேன் . இப்போது பலமான காற்று அடிக்க என் கண்ணில் ஒரு தூசி விழுந்துவிட்டது . இருந்தாலும் கண்ணை திறந்து ஆர்வத்தில் என்னநடக்கிறது என்று பார்க்கிறேன் . காற்று  அடிக்கிறது.. பலமாகவே அடிக்கிறது… நிச்சயம் மழை வரும் . கண்களை திறந்து உற்றுப்பார்க்கிறேன்  . காற்று இன்னும் பலமாக அடிக்க ,  இருவரின் உருவமும் கொஞ்சம் கொஞ்சமாக கலைகிறது.    எனக்கு ஏமாற்றம் தான் ,  இருவரும் கலைந்து மேகத்தோடு கலந்துவிட்டார்கள்  . நான் வானத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் .  ஏன் இந்த காற்று இப்படி செய்தது …  காதல் பிடிக்கவில்லையா அல்லது இங்கு வேண்டாம் வேறு இடத்திற்கு செல்லுங்கள் என்று கூறிவிட்டதா ,   தெரியவில்லை . இதே போல் முன்பு ஒரு முறை சிங்கம் ஒன்றை பார்த்தேன் , தூரத்தில் குதிரை வந்ததும் ஓடிவிட்டது .  இதற்கு காரணமும் இதே காற்று தான் .   காற்றின் மீது எனக்கு பயங்கர கோபம் ,   சிறிது நேரத்தில்   மழை வந்து என்னை சாந்தப்படுத்தியது .  என் தம்பி கூப்பிடும் சத்தம் கேட்டது   , அவனிடம் சொல்வதற்காக சந்தோஷமாக மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கினேன் , என்னை விட அதிக சந்தோஷத்தோடு   என்னைநோக்கி ஓடிவந்தான் .  மூச்சு வாங்க ,  சிரித்தபடியே கூறினான்…            ” இன்று எனக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்தாள் ” .