பெண் வீட்டில் அனைவரும் ஒருவித பதட்டத்தோடு இருந்தார்கள் , காரணம் இன்று மாலை அபர்ணாவை பெண் பார்க்க தஞ்சாவூரில் இருந்து வருகிறார்கள் . மதிய உணவு பெண் வீட்டில் என்று ஏற்கனவே முடிவாகிவிட்டது . கறி , கோழி , மீன் என்று பல வகை சமையல் தயாராகிறது . அபர்ணா வீட்டின் கடைசி பெண் , மிகவும் அழகானவள் , அமைதியானவள் , வீட்டு வேலைகளை பொறுப்போடு கவனித்துக்கொள்பவள் . இந்த திருமணம் நல்லபடியே முடிந்தால் திருப்பதி சென்று மொட்டை அடிப்பதாக அவள் அம்மா அப்பா இருவரும் வேண்டிகொண்டார்கள் . தொலைபேசி அடிக்க அபர்ணாவின் மூத்த அண்ணன் எடுத்தான் , சரி… சரி என்று கூறிவிட்டு மாப்பிள்ளை வீட்டார் இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவார்கள் என்று கூற பரபரப்பானது வீடு . அபர்ணாவுக்கு மூன்று பெண்கள் சேலை கட்டிவிட்டார்கள் , ஒருத்தி முக அலங்காரம் செய்தாள்.
சிறிது நேரத்தில் இரண்டு கார் வீட்டின் முன்பு வந்து நின்றது . மாப்பிள்ளை வீட்டாரை அனைவரும் சென்று வரவேற்றார்கள் . சிரித்தபடியே சேகர் வீட்டிற்குள் வந்தான் ஒருவர் விடாமல் அனைவரோடும் கை குலுக்கிக்கொண்டான் .சேகர் சொந்தமாக தொழில் செய்கிறான் இவனிடம் நான்கு பேர் வேலை செய்கிறார்கள் , நல்ல வருமானம் பாவம் நீண்ட நாளாக பெண் தேடிக்கொண்டிருக்கிறான் . சேகரை பார்த்து மாப்பிள்ளை நல்ல உயரம் என்று பேசிக்கொண்டார்கள் . மிகவும் அமைதியாகவே இருந்தான் , பெண்ணை அழைத்து வாருங்கள் என்று ஒருவர் கூற முகத்தில் எந்த மாற்றமும் இல்லை . அபர்ணா பச்சை நிற புடவையில் வந்தாள் , அவளுடைய அண்ணி சேகரின் அருகே அவளை உட்கார வைத்தார் . சேகரும் அபர்ணாவும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை மௌனமாக இருந்தார்கள் .
சேகர் மெதுவாக அவளுடைய விரலை பிடித்தான் அவள் அமைதியாக இருந்தாள். அவள் கையை இறுக்கமாக பிடித்தான் மோதிரத்தை தொட்டுப்பார்த்தான் . கையில் போட்டிருந்த வளையல் சத்தமிட்டது ,அனைவரும் சிரித்தார்கள் . இவர்களுக்கும் சிரிப்பு வந்தது அவள் உள்ளங்கையில் இவனுடைய கையை வைத்து தேய்த்தான் அவளுக்கு கூசியது . கையை எடுக்க முயல்வாள் என்று எண்ணினான் ஆனால்அமைதியாக இருந்தாள் . அவளுடைய தோளை பிடித்தான் மெல்ல அவள் அருகில் சென்று நெருக்கமாக உட்கார்ந்தான் . அவள் கூந்தல் இவன் கையை தொட்டது , பூவாசம் இவனை பரவசப்படுத்தியது . கன்னத்தை பிடித்து இவன் பக்கம் திருப்பினான் , கண், மூக்கு, உதடு, கழுத்து என அவள் முகமெங்கும் இவன் கை பரவியது .
அபர்ணாவின் சந்தோசம் அவள் கைகளில் தெரிந்தது . சேகரின் கைகளை இறுக்கமாக பிடித்திருந்தாள். அவள் கைகளை பிடித்து இவனுடைய கன்னத்தில் வைத்தான் . மீசை குத்தியதால் அவளுக்கு சிரிப்பு வந்தது மீண்டும் இருவரும் சிரித்தார்கள் . அந்த நிமிடம் கண் பார்வையிழந்த சேகர் அபர்ணாவின் திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்டது . அபர்ணாவின் தந்தை சிரித்தபடியே தலையை தடவிக்கொண்டார் .




